காட்டில் ஒரு முயல் குட்டியாம்! - நீதிக் கதை


காட்டில் ஒரு முயல் குட்டியாம்! - நீதிக் கதை by அன்புடன்-மணிகண்டன்

அழகிய காடு அது. அதில் வசித்துவரும் சிறிய முயல் ஒன்று முதன் முறையாக பெற்றோர் துணையின்றி இரை தேட வந்தது. வெகுநேரம் தேடியதற்குப் பின், மண்ணில் புதைத்திருந்த கிழங்கினைக் கண்டது. இருப்பினும், அது சிறிய முயல் ஆனதாலும், களைப்பினாலும் அந்தக் கிழங்கினை அதனால் தோண்டி எடுக்க இயலவில்லை.

என்ன செய்யலாம் என்று அந்த முயல் குட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போது, அருகில் பசுந்தழைகளை மேய்ந்து கொண்டிருந்த இரண்டு மான்களைக் கண்டது. உடனே, ஓடிச்சென்று, அந்த மான்களிடம் நிலைமையை சொல்லி, தனக்கு உதவுமாறு வேண்டியது. அதில் ஒரு மான், உனக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும்; உதவினால் என்ன பயன் என்றும் கேட்டது. குட்டி முயலால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எனவே வருத்தத்துடன் தலையை குனிந்து கொண்டது. அருகிலிருந்த மற்றொரு மான், முயலிடம், தான் உதவுவதாக சொன்னது. சொன்னது போல், அந்த மான் பெரிதாய் வளர்ந்திருந்த தனது கொம்பினால் நிலத்தைக் கீறி அந்த கிழங்கை எடுத்து முயல் குட்டிக்குக் கொடுத்தது. முயல்குட்டியும் மகிழ்ச்சியுடன் அந்த மானுக்கு தனது நன்றியைத் தெரிவித்தது.

இந்நேரத்தில், உதவ வராமல் மேய்ந்து கொண்டிருந்த மான், வேடன் ஒருவன் விரித்து வைத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டது. எவ்வளவோ முயன்றும், அதனால் அந்த வலையை விட்டு வெளியே வர முடியவில்லை. இதைக் கண்ட மற்றொரு மானும் செய்வதறியாது தவித்தது. உடனே முயல் குட்டி விரைவாக ஓடிச்சென்று தனது முயல் கூட்டத்தாரை அழைத்து வந்தது. அனைத்து முயல்களும், தங்களின் கூரிய பற்களால், வலையைக் கடித்துக் குதறி, மானை விடுவித்தன. வலையில் இருந்து வெளிவந்த மான், தன்னைக் காப்பாறிய முயல் கூட்டத்திடம் நன்றியைத் தெரிவித்தது. மேலும், தான் உதவ மறுத்த தவறுக்காக மனம் வருந்தி, அந்த முயல் குட்டியிடம் மன்னிப்பும் கேட்டது.

நீதி:
1 . தன்னால் ஆன உதவியை, பிரதிபலனை எதிர்பார்க்காமல் மற்றோருக்கு செய்ய வேண்டும்.
2 . ஒருவர் நமக்கு உதவாமல் போனாலும், அவருக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.

0 comments: