திருக்குறள் கதைகள் - கூடா நட்பு

எந்தக் கிழமையில் நீ பிறந்தாய்

ஞாயிற்றுக் கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.

திங்கட் கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்.

செவ்வாய்க் கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்.

புதன் கிழமை பிறந்த பிள்ளை
பூமியில் மரங்கள் வளர்த்திடுமாம்

வியாழக் கிழமை பிறந்த பிள்ளை
வீரமாய் நாட்டைக் காத்திடுமாம்.

வெள்ளிக் கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்.

சனிக் கிழமை பிறந்த பிள்ளை
சாதனைகள் புரிந்திடுமாம்.

இந்தக் கிழமைகள் ஏழுக்குள்
எந்தக் கிழமையில் நீ பிறந்தாய்?

அலமு: ஞாயிற்றுக் கிழமை நான்பிறந்தேன்.
நன்றாய்ப் பாடம் படித்திடுவேன்.

அழகப்பன்: திங்கட் கிழமை நான்பிறந்தேன்.
தினமும் உண்மை பேசிடுவேன்.

(இப்படியே ஒவ்வொரு குழந்தையும் அவரவர் பிறந்த கிழமைக்கு ஏற்றபடி பதில் கூறலாம்.)

.

காட்டில் ஒரு திருமணம்

அம்மா

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்
கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
பாலும் சோறும் ஊட்டிடுவாய்
பாட்டும் பாடிக் காட்டிடுவாய்
தொட்டிலி(ல்) இட்டுத் தாலாட்டித்
தூங்கச் செய்வாய் எந்தனையே
கண்ணை இமை காப்பதுபோல்
காத்து என்னை வளர்த்திடும்
அன்னை உனைப்போல் இவ்வுலகில்
ஆரும் இல்லை இல்லையே!


-கவிஞர்.த.துரைசிங்கம்

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி
மாளவில்லை வேலை தொல்லை
பசுவும் வெளியே காத்திருக்க
பால் கறக்க நேரமில்லை
கண்கள் இரண்டும் சொக்கிப் போச்சு
கால்கள் இரண்டும் மருகிப் போச்சு
வைத்தியரும் அருகே இல்லை
வகை ஒன்றும் தெரியவில்லை
இடிச்ச இஞ்சிச் சாறெடுத்து
இம்மி மிளகு உடன் சேர்த்து
சுக்குக் கசாயம் போட்டேனடி
சுரமும் காத்தாய்ப் பறந்து போச்சு.

மிருகக் காட்சி சாலை

அம்மா அப்பா அழைத்துச் சென்றார் அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்  ஆடத் தொடங்கின
பொல்லா நரி புனுகுப் பூனை எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி கூட நின்றன
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது
முதலைத் தலையைத் தூக்கி மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று
சிங்கம் புலி எல்லாம் கண்டேன் கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன் சிறிதும் அஞ்சவில்லை
சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!

.

ஒன்று ரெண்டு மூன்று நாலு

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.
ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்குலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்ல
உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.

நிலா

வட்ட நிலா சுற்றிச்சுற்றி வானில் ஒடுது
வா வென்றே நானழைத்தால் வர மறுக்குது!
எட்டி எட்டிப் பார்த்தாலுமே எட்டப் போகுது
ஏனென்று கேட்டால் அது சிரித்து மழுப்புது"

மயிலே குயிலே

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகிர்ந்துண்ண சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழ சொல்லித்தா!

கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழ் சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்க  கற்றுத்தா!

கொழுக்கட்டை

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்காரரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

பசுவே பசுவே

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

குட்டிக் குட்டிக் கண்ணா

குட்டி குட்டி கண்ணனாம்
குறும்பு செய்யும் கண்ணனாம்
கண்ணடிக்கும் கண்ணனாம்
கண் கவரும் கண்ணனாம்

முத்துப் பல் கண்ணனாம்
முத்தம் தரும் கண்ணனாம்
குழலூதும் கண்ணனாம்
குஷியாக்கும் கண்ணனாம்

மயிலிறகுக் கண்ணனாம்
மனம் மயக்கும் கண்ணனாம்
கொஞ்சிப் பேசும் கண்ணனாம்
கொட்டம் செய்யும் கண்ணனாம்

வெண்ணை தின்னும் கண்ணனாம்
வெள்ளை உள்ளக் கண்ணனாம்
வீரமுள்ள கண்ணனாம்
வெற்றி பெரும் கண்ணனாம்

ஞானமுள்ள கண்ணனாம்
நன்மை செய்யும் கண்ணனாம்
மாடு மேய்த்த கண்ணனாம்
மாசு போக்கும் கண்ணனாம்

பாட்டுப் பாடும் கண்ணனாம்
பாவம் போக்கும் கண்ணனாம்
ஆட்டம் போடும் கண்ணனாம்
ஆனந்தக் கண்ணனாம்

மனம் மகிழ போற்றுவோம்
மாலைகள் பல சாற்றுவோம்
அவன் புகழை பாடுவோம்
ஆனந்தக் கூத்தாடுவோம்

இந்தப் பாடலை எழுதியவர்:
நன்றி சகோதரா!

பூனைக்குட்டி

பூனைக்குட்டி பூனைக்குட்டி கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன் கூட வராதே

பாலைக் குடித்து ஆட்டம் போடு கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு கூட வராதே

கோபப் பார்வை பார்க்க வேண்டாம் கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன் கூட வராதே

பள்ளிக்கூடம் போகின்றேன் கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார் கூட வராதே!
-பாவண்ணன்


.

தஞ்சாவூரு பொம்மை

தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்

எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!

கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்

எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!



.

நல்ல குரங்கினம்

மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது
கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது
இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது
மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே
கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்
ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே
ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே
நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே

யானையும் குட்டி குழந்தைகளும்

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது
அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது
பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது
அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது
டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

பள்ளிக் கூடம் போகலாமே

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!

வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!


உடலும் மனமும் வளர்வதர்ற்கு
சின்ன பாப்பா -ஏற்ற
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!

பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!

மயிலே குயிலே

மயிலே, மயிலே ஆடிவா
மக்காச் சோளம் தருகிறேன்!
குயிலே, குயிலே பாடிவா
கோவைப் பழங்கள் தருகிறேன்!

பச்சைக் கிளியே பறந்துவா
பழுத்த கொய்யா தருகிறேன்!
சிட்டுக் குருவி நடந்துவா
சட்டை போட்டு விடுகிறேன்!

ஓடைக் கொக்கு இங்கே வா
ஓடிப் பிடித்து ஆடலாம்!
மாடப் புறாவே இறங்கிவா
மடியில் குந்திப் பேசலாம்!

இளநீர்

தென்னை மரத்து இளநீரூ -நல்ல
தேன்போல இனிக்கும் சுவைநீரு
என்றும் எங்கும் கிடைத்திடுமே -தினம்
ஏற்றுக் குடித்தால் நலம் தருமே!

பானத்தில் இளநீர் அரியவகை -எந்த
காலமும் நமக்கு நல்ல துணை
விலையோ ஒன்றும் அதிகமில்லை -இங்கு
இதுபோல் பானம் வேறு இல்லை.

இயற்கை தந்தது இளநீரு -நல்ல
இன்சுவை தந்திடும் இளநீரு
உடலின் வெப்பம் தணித்திடுமே -நம்
உள்ளம் தனிலே நிறைந்திடுமே!

கொத்துக் கொத்தாய் காய்த்திடுமே -நம்
அனைவரின் தாகம் தீர்த்திடுமே!
அனைவரும் நாளும் குடித்திடலாம் -வரும்
ஆனந்தம் தனிலே திளைத்திடலாம்!

நன்றி: முத்தமிழ்மன்றம்

அஆஇஈ

அ - இது ஓர் அத்திப்பழம்
ஆ - எம்பவன் ஆசைப்பட்டான்
இ - என்பவன் இதோ என்றான்
ஈ - என்பவன் ஈ என்றான்
உ - என்பவன் உரி என்றான்
ஊ என்பவன் ஊது என்றான்
எ என்பவன் எனக்கு என்றான்
ஏ என்பவன் ஏது என்றான்
ஐ என்பவன் ஐயா என்றான்
ஒ என்பவன் ஒன்று என்றான்
ஓ என்பவன் ஓடி விட்டான்
ஔ என்பவன் கௌவிக் கொண்டான்

வானத்திலே திருவிழா

கவிஞர் முனைவர் பொன்.செல்வகணபதி

வானத்திலே திருவிழா!
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்!
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்!
எட்டுதிசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே!
தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணை யோரம் செல்லுமே!
தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே!
பார்முழுதும் வீட்டிலே
பறவைகூட கூட்டிலே!
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை!

குட்டி எலியும் சிங்கமும்

குட்டி எலி அன்றொரு நாள்
குதிச்சு குதிச்சு ஓடிச்சாம்!
யானை, புலி, சிங்கம் காண
ஆசை கொண்டு ஓடிச்சாம்!
உயரமான மரத்தில் ஏறி
உலகமெல்லாம் பார்த்ததாம்!
தூரத்திலே சிங்கம் ஒன்று
தூங்குவதைப் பார்த்ததாம்!
மளமள என்று இறங்கி
அது மகிழ்ச்சியுடன் ஓடிச்சாம்!
மேலும் கீழும் பார்த்து
அதன் மீசையை பிடித்து இழுத்ததாம்!
வளைய வளைய வந்து
அதன் வாலைப் பிடித்து இழுத்ததாம்!
கோபம் கொண்டு எழுந்த சிங்கம்
குட்டி எலியைப் பிடித்ததாம்!
கையில் பிடித்த எலியை அது
கடித்து தின்ன பார்த்ததாம்!
கை கூப்பி குட்டி எலியும்
கருணை கருணை என்றதாம்!
மண்டியிட்டு குட்டி எலியும்
மன்னிப்பு என்றதாம்!
பெரிய மனசு பண்ணி சிங்கம்
பிழைத்துப்போ என்றதாம்!
விடுவிடு என்று நடந்த சிங்கம்
வேடன் வலையில் விழுந்ததாம்!
அது கர்ஜித்து அழுத ஓசை
காடு முழுதும் கேட்டதாம்!
எங்கோ கேட்ட குரல் என்று
குட்டி எலியும் வந்ததாம்!
சிங்கம் சிக்கியிருந்த வலையை அது
சின்னாபின்னமாய் கடித்ததாம்!
வெளியில் வந்த சிங்கம் எலியிடம்
நன்றி நன்றி என்றதாம்!
செய்த நன்றி மறவேன் என்று
சின்ன எலியும் சொன்னதாம்!

எறும்பு

சின்னச் சின்ன எறும்பே
சிங்கார சிற்றெறும்பே!
உன்னைப் போல நானுமே
உழைத்திடவே வேனுமே!
ஒன்றன் பின்னே ஒன்றாய்
ஊர்ந்து போவீர் நன்றாய்!
நன்றாய் உம்மைக் கண்டே
நடந்தால் நன்மை உண்டே
-பேராசிரியர் கா நமச்சிவாயர்

குண்டு பையன் சுண்டு

குண்டு பையன் சுண்டுவாம்
சுவரின் மேலே உட்கார்ந்தான்.
சுண்டு கீழே விழுந்தானே
துண்டு துண்டாய் ஆனானே.
ஒண்ணா சேர்க்க முடியலையாம்.
ராஜா வந்தும் முடியலையாம்.
ராணுவம் வந்தும் முடியலையாம்!

பள்ளி செல்வோம்

குதித்துக் குதித்து ஓடும்
குதிரை அதோ பாராய்
அசைந்து அசைந்து செல்லும்
ஆனை இதோ பாராய்
பறந்து பறந்து போகும்
பருந்து அதோ பாராய்
தத்தித் தத்திப் போகும்
தவளை இதோ பாராய்
துள்ளித் துள்ளி நாமும்
பள்ளி செல்வோம் வாராய்

மாடிவீட்டுத் தாத்தா

மாடிவீட்டுத் தாத்தாவுக்கு
காடு போலத் தாடியாம்
மாடி மேலே நிற்கும் போதும்
தாடி மண்ணில் புரளுமாம்

ஆந்தை இரண்டு, கோழி, மைனா
அண்டங்காக்கை குருவிகள்
பாந்தமாகத் தாடிக்குள்ளே
பதுங்கிக் கொண்டிருந்தன

உச்சி மீது நின்ற தாத்தா
உடல் குலுங்கத் தும்மினார்
அச்சு அச்சு என்ற போது
அவை அனைத்தும் பறந்தன.

பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதியப் புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே
--தணிகை உலகநாதன்

எங்கள் தாய்நாடு

பாரதம் எங்கள் தாய்நாடு
பாரில் உயர்ந்த பொன்நாடு
யாரும் கூடித் தோழர்களாய்
இன்பம் காணும் திருநாடு
வடக்கே இமய மலை எல்லை
வணங்கும் குமரி தென் எல்லை
கேள் நீ இதற்கு நிகர் இல்லை
எத்தனை மதங்கள் இந்நாட்டில்
எத்தனை மொழிகள் இந்நாட்டில்
எத்தனை இனங்கள் இந்நாட்டில்
எனினும் நாம் ஒரு தாய் மக்கள்

தமிழ் மாதங்கள்

சித்திரை முதல் மாதமது
சென்ற பின் வைகாசி
ஆனி மூன்றாக வரும்
ஆடியோ நான்காகும்
பொன் போல் ஆவணியாம்
அது போன பின் புரட்டாசி
ஐப்பசி கார்த்திகையாம்
அவள் அக்காள் தங்கைகளாம்
மார்கழி மாதமாம் அது
மாதங்களின் தலையாகும்
தை ஒரு மாதமாகும்
அது தமிழர்களின் திருநாளாம்
மாசி பதினொன்றாகும்
அதன் மகளே பங்குனியாம்
மாதங்கள் பன்னிரண்டு
தமிழ் மக்களின் ஓராண்டு

உயரே போகுது பட்டம்

உயரே போகுது பட்டம்
உயரே போகுது
காற்றின் உதவி இருப்பதாலே
உயரே போகுது
மேலே போன பட்டம்
ஒரு நாள் கீழே வந்தது
செருக்கு வேண்டாம் என்றொரு
பாடம் சொல்லித் தந்தது

உடல் உறுப்புக்கள்

கண்ணிருக்கு கண்ணிருக்கு
காண்பவர் உள்ளம் களிப்பதற்கு
காதிருக்கு காதிருக்கு
நல்லவை யாவும் கேட்பதற்கு
இனிமை தரும் வார்த்தைகளைச்
சொல்லிடத்தானே வாயிருக்கு
நறுமணத்தை நுகர்வதற்கு
இயற்கை தந்த மூக்கிருக்கு
கையிருக்கு கையிருக்கு
பிறருக்கு உதவி புரிவதற்கு
காலிருக்கு காலிருக்கு
நல்லதைத் தேடி நடப்பதற்கு
நம்முடைய உறுப்புக்களை
நலமாய் நாமும் காத்திடுவோம்

நல்லப்பாப்பா

நல்லப்பாப்பா நல்லப்பாப்பா எங்கப்பாப்பா
சொல்லும் சொல்லைக் கேட்டு நடப்பாள் எங்கப்பாப்பா
தாத்தா பாட்டி அம்மா அப்பா தாங்கும் பாப்பா
திருக்குறள் காட்டும் பாதை வழியே நடக்கும் பாப்பா

பச்சைக் கிளியே வா வா

பச்சைக் கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா

தங்கக் குடமே தாராவே

தங்கக் குடமே தாராவே
தட்டான் வீட்டுக்குப் போகாதே
தட்டான் வந்தாப் பிடிப்பான்
தராசுல போட்டு நெறுப்பான்
காசு எங்கேன்னு கேப்பான்
இல்லைன்னு சொன்னா அடிப்பான்

காய்கறிகள்

குண்டு குண்டு கத்திரிக்காய்
விரலு போல வெண்டைக்காய்
பாம்பு போல புடலங்காய்
கசக்கும் நல்ல பாகற்காய்
குட்டி குட்டி கோவற்காய்
கொடியில் காய்க்கும் சுரைக்காய்
பெரிய பெரிய பூசணிக்காய்
புளிக்கும் இந்த மாங்காய்
சிகப்பு நிற கேரட்டு
இனிக்கும் இந்த பீட்ரூட்டு
விதவிதமாய் காய்கறி
வாங்கி வருவோம் கடையிலே

சேமிப்பு

கோடைக்காலம் வந்ததாம்
கோடி எறும்பு போகுதாம்
தலையில் உணவைத் தூக்கியே
தரையில் நடந்து போகுதாம்
பாதி உணவைத் தின்றதாம்
மீதி பாதி சேர்த்ததாம்
மழைக்காலம் வந்ததாம்
மாரி அதிகம் பெய்ததாம்
வெளியில் செல்ல முடியாமல்
சேர்த்த உணவைத் தின்றதாம்
எறும்புக் கூட்டம் போலவே
எதிர்காலத்திற்கு சேர்ப்போமே!

ஆசிரியர்

பாடம் கற்றுத் தருவாரே
பண்பாய் வாழச் செய்தாரே
ஒழுக்கம் கற்றுத் தருவாரே
ஒழுங்காய் வாழச் செய்தாரே
அன்பு செய்ய சொன்னாரே
அழகாய் பேசச் செய்தாரே
கருணை காட்டச் சொன்னாரே
கவிதைப் பாடச் செய்தாரே
தப்பு செய்தால் அடிப்பாரே
திரும்பச் செய்யாமல் தடுப்பாரே
ஏணிப் போலே இருப்பவரே
எங்களை ஏற்றி விட்டாரே
அறிவை வளர்த்த ஆசிரியரே
ஆயிரம் நன்றி கூறுகிறோம்

நேரு மாமா

நேரு மாமா நல்லவராம்
நேர்மை மிக்க தலைவராம்
ரோஜாப் பூவை அணிந்தவராம்
குழந்தைகள் அன்பை பெற்றவராம்
எளிமையாக வாழ்ந்தவராம்
எளிமையாக இருந்தவராம்
தியாக வாழ்க்கை வாழ்ந்தவராம்
திறமையான வல்லவராம்
குறும்புச் சிரிப்புச் சிரிப்பவராம்
குழந்தை மனது உள்ளவராம்

தாத்தா

நாளும் என்னை பள்ளிக்கு
கூட்டிச் செல்லும் தாத்தா
நல்ல நல்ல பண்டங்கள்
வாங்கித் தரும் தாத்தா
தூங்கும் முன்னே இரவினிலே
கதைகள் சொல்லும் தாத்தா
தூக்கி என்னை செல்லமாய்
கொஞ்சி மகிழும் தாத்தா
கட்ட சைக்கிள் ஓட்டவே
கற்றுத் தந்தத் தாத்தா
-வல்லநாடு ராமலிங்கம்

வெய்யில் காலம்

வெய்யில் காலம் வந்ததால்
வியர்வை உடம்பில் வழியுதே
நாக்கும் கூட தாகத்தால்
தண்ணீர் கேட்டு தவிக்குதே
தாரு போட்ட சாலையில்
தணலாய் வெய்யில் கொதிக்குதே
செருப்பில்லாமல் நடக்கவே
கால்கள் இரண்டும் மறுக்குதே
கிணற்றுத் தண்ணீர் மட்டமும்
கீழே கீழே போகுதே
-வல்லநாடு ராமலிங்கம்

நத்தை

நத்தைக் கூட்டைப் பாருங்கள்
நகரும் அழகை ரசியுங்கள்
கெட்டியான வீட்டினுள்
அமைதியாக வாழுது
மெல்ல எட்டிப் பார்க்கையில்
பட்டு மேனி மின்னுது
மழையின் காலம் முழுவதும்
கவலை இன்றி உலவுது
ஆசை கொண்டு தொடுகையில்
அதுவும் வாசல் அடைக்குது
-வல்லநாடு ராமலிங்கம்

பட்டணமும் போகலாம்

பட்டணமும் போகலாம்
பட்டுச் சொக்காய் வாங்கலாம்
பஸ்சில் ஏறி சுற்றலாம்
பண்டம் வாங்கித் தின்னலாம்
பூங்கா போய் ஆடலாம்
புதிய நட்பைத் தேடலாம்
அழகுப் பேனா வாங்கலாம்
ஆசை தீர எழுதலாம்
பட்டம் ஒன்று கட்டலாம்
பறக்க விட்டு மகிழலாம்
-வல்லநாடு ராமலிங்கம்

கருப்புநிற நாய்க்குட்டி

கருப்புநிற நாய்க்குட்டி
காவல் செய்யும் நாய்க்குட்டி
கள்ளமில்லா நாய்க்குட்டி
கடமையாற்றும் நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி
நன்மை செய்யும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
செல்லப் பிராணி நாய்க்குட்டி
உண்மை வாய்ந்த நாய்க்குட்டி
உள்ளம் கவர்ந்த நாய்க்குட்டி
-வல்லநாடு ராமலிங்கம்

பாப்பா பாராய் என் பட்டம்

பாப்பா பாராய் என் பட்டம்
பறக்குது வானில் என் பட்டம்
விமானம் போலே வானத்திலே
விரைந்தே போகுது என் பட்டம்
அதிக அதிக உயரத்திலே
அழகாய் போகுது என் பட்டம்
எந்தன் பட்டம் பறப்பதையே
எல்லோரும் வந்து பாருங்களேன்
-வல்லநாடு ராமலிங்கம்

வெள்ளை நிறப் பூனை

வெள்ளை நிறப் பூனையொன்று வீட்டில் இருக்குது
தொல்லை தரும் எலிகளைத்தான் துரத்திப் பிடிக்குது
செல்லமாக மடியில் வந்து ஏறிக் கொள்ளுது
சிணுங்கலாக குரலைத் தந்து அன்பு காட்டுது
பசியும் வந்தால் பாலுக்காக செல்லம் கொஞ்சுது
-வல்லநாடு ராமலிங்கம்

குருவி

பஞ்சு போல் மேனியால்
பறந்து வரும் குருவியே
பக்கத்தில் வந்ததும்
பாசங் காட்டும் குருவியே
இரண்டு சிறிய கண்களால்
இரையைத் தேடும் குருவியே
இனிய கீச்சுக் குரலிலே
இசை பாடும் குருவியே
கோரைப் புற்கள் சுள்ளியால்
கூடு கட்டும் குருவியே
பொழுது சாயும் வேளையில்
கூடு திரும்பும் குருவியே
ஜோடியாக அன்புடன்
வாழ்ந்து வரும் குருவியே
-வல்லநாடு ராமலிங்கம்

எறும்பு

எறும்புக் கூட்டம் பாருங்கள்
என்ன ஒழுங்கு பாருங்கள்
வரிசையான பயணத்தின்
வாழ்க்கை முறையை போற்றுங்கள்
சுறு சுறுப்பாய் எறும்பிது
சோம்பல் தனத்தை வெறுக்குது
வேண்டுமளவு சேமித்து
மகிழ்ச்சியாக வாழுது
உழைப்பினாலே உயர்கின்ற
உண்மை நமக்குக் கூறுது
-வல்லநாடு ராமலிங்கம்

தபால்காரர்

தபால்காரர் வருகிறார்
தபால் கொண்டு தருகிறார்
வீடு தேடி வருகிறார்
மணியடித்து அழைக்கிறார்
வெய்யிலிலும் வருகிறார்
விரைந்து தபால் தருகிறார்
மழையின் போதும் வருகிறார்
மதித்து கடமை செய்கிறார்
காக்கி உடையில் வருகிறார்
கருத்தாய் கடமை செய்கிறார்
-வல்லநாடு ராமலிங்கம்

மல்லிகைப் பூ

வெள்ளை பிறப் பூவிது
விரும்புகின்ற பூவிது
வாசம் வீசும் பூவிது
வசந்தம் தரும் பூவிது
கூந்தல் நாடும் பூவிது
கோவில் மாலைப் பூவிது
மகிழ்ச்சி தரும் பூவிது
மலிவான பூவிது
ஏழை வாங்கும் பூவிது
எளிமையான பூவிது
-வல்லநாடு ராமலிங்கம்

பூங்கா

பூங்காவுக்குப் போகலாம்
பொழுதை நன்கு போக்கலாம்
இனிய காற்று வாங்கலாம்
இன்பம் பெற்றுச் செல்லலாம்
கவலை எல்லாம் மறக்கலாம்
கற்பனையில் மிதக்கலாம்
ஆசை தீர பேசலாம்
அழகு பூக்கள் ரசிக்கலாம்
பசுமை விருந்து பருகலாம்
அருமையாக ஓடலாம்
-வல்லநாடு ராமலிங்கம்

குழந்தை

மழலை மொழி பேச்சினால்
மனதைக் கவரும் குழந்தையாம்
மாசில்லாத உள்ளத்தால்
மகிழ்ச்சி தரும் குழந்தையாம்
கள்ளமில்லா பார்வையால்
கனிவு காட்டும் குழந்தையாம்
தவழ்ந்து போகும் குழந்தையாம்
தளர்ந்து போகா குழந்தையாம்
மிட்டாய் கேட்கும் குழந்தையாம்
மெல்லச் சிரிக்கும் குழந்தையாம்
-வல்லநாடு ராமலிங்கம்

கோழி

கொக்கரக்கோ - கொக்கரக்கோ
கோழி கூவுது
கூரையிலே ஏறி நின்னு
கூவிப் பார்க்குது
குப்பை கூளம் கிளறிப்பார்த்து
இரையும் தேடுது
தரையில் கிடக்கும் தானியத்தை
கிளறித் தின்னுது
விடியப் போகும் வேளையிலே
கூவி எழுப்புது
கொண்டையத் தான் ஆட்டிக்கிட்டு
நம்மைப் பார்க்குது
-வல்லநாடு ராமலிங்கம்

பொம்மை

பொம்மை நல்ல பொம்மை
புதுமையான பொம்மை
சொன்னதை கேட்கும் பொம்மை
சொக்காய் போட்ட பொம்மை
சிரிக்கும் அழகு பொம்மை
சிந்தை கவர்ந்த பொம்மை
கண்ணைச் சிமிட்டும் பொம்மை
கையை ஆட்டும் பொம்மை
மிடுக்காய் நிற்கும் பொம்மை
மிகவும் நல்ல பொம்மை
-வல்லநாடு ராமலிங்கம்

வாத்து

தத்தி நடக்கும் வாத்திது
தண்ணீரிலே நீந்துது
கூட்டமாக செல்லுது
கருத்தாய் இரை தேடுது
சின்னக் கண்கள் கொண்டது
சிங்காரமாய் உலவுது
வாய்க்கால் வரப்பில் ஓடுது
வாய் ஓயாமல் கத்துது
பெரிய முட்டை போடுது
வெள்ளை நிற வாத்திது
-வல்லநாடு ராமலிங்கம்

பறவைகள்

ஆடிக் களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித் தா!
பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப்பாட சொல்லித் தா!
தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்க சொல்லித் தா!
கூவும் சேவல் இங்கே வா
கூவி எழுந்திட சொல்லித் தா!
-வல்லநாடு ராமலிங்கம்

லட்டு

லட்டு ஒன்று வாங்கலாம்
லாவகமாய் தின்னலாம்
பிட்டு பிட்டு ஆசையாய்
பிறருக்குமே கொடுக்கலாம்
சீனி கடலை மாவினால்
சேர்த்து செய்த லட்டிது
ஈ மொய்க்கா பாட்டிலில்
கடைவீதியிலே விற்குது
வேண்டியதைத் தின்னலாம்
ஓடி பாடி ஆடலாம்
-வல்லநாடு ராமலிங்கம்

பசு

வெள்ளை நிறப் பசுவிது
விரும்பி புல்லைத் தின்னுது
கழனி தந்தால் அன்புடன்
வாலை ஆட்டிக் குடிக்குது
தொட்டுத் தடவிக் குடுக்கையில்
தோளை மெல்ல ஆட்டுது
காலை - மாலை வேளையில்
பாலை நிறையக் கொடுக்குது
கனிவுடனே நன்மைகள்
பல நமக்குச் செய்யுது
-வல்லநாடு ராமலிங்கம்

வடை

பாட்டி சுட்ட வடையிது
பருப்பும் உளுந்தும் கலந்தது
வட்ட வடிவ வடையிது
வாய்க்கு ருசியாய் இருக்குது
மிருதுவான வடையிது
மென்று தின்ன ருசிக்குது
மூக்கை வாசம் துளைக்குது
மொறு-மொறுன்னு இருக்குது
தின்ன தின்ன கேட்குது
தினமும் கேட்க தோணுது
-வல்லநாடு ராமலிங்கம்

நிலா

வட்ட வடிவ நிலவிது
வானில் மிதந்து செல்லுது
இரவில் நமக்குத் தெறியுது
தேய்ந்து மீண்டும் வளருது
எட்டி எட்டி பார்க்குது
எட்டாமல் தான் வருகுது
சோறு ஊட்ட உதவுது
சோலைக் கழகு காட்டுது

காக்கா நரியின் கதை

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஊருக்கு வெளியே ஒரு கடையாம்
கடையில் வெங்காய வடை இருக்காம்
வடையைக் காக்கா திருடிடிச்சாம்
மரத்தின் மேலே ஏறிகிச்சாம்
காக்கா வாயிலே வடையிருக்கா
குள்ள நரியும் பாத்திருச்சாம்
நேக்கா வடையை தின்றிடவே
நரியும் தந்திரம் பண்ணிடுச்சாம்
காக்காவ பாட்டு பாடச் சொல்லி
குள்ள நரியும் கேட்டுகிச்சாம்
வாய திறந்து காக்காவும்
பாட்டு ஒன்னு பாடிடுச்சாம்
வடையும் கீழே விழுந்திருச்சாம்
நரியும் வடையை கவ்விகிச்சாம்
வாயில போட்டு முழுங்கிருச்சாம்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்றது வெள்ளை பசு உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளை பசு
பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி
முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி
முட்டிக்கொடுக்குது கன்றுக்குட்டி

பனை மரமே

பனை மரமே பனை மரமே
ஏன் வளர்ந்தாய் பனை மரமே?
நான் வளர்ந்த காரணத்தை
நல்லவரே சொல்லுகின்றேன்
படுக்க நல்ல பாயாவேன்
வசிக்க நல்ல வீடாவேன்
வெட்ட நல்ல விறகாவேன்
வீடு கட்ட மரமாவேன்

ஆத்திச்சூடி

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விளக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
அஃகம் சுருக்கு

சின்னச் சின்ன மோட்டார்

சின்னச் சின்ன மோட்டார்
சிங்கார மோட்டார்
நான்கு சக்கர மோட்டார்
நாங்கள் ஏறும் மோட்டார்
பாம் பாம் மோட்டார்
பாய்ந்து செல்லும் மோட்டார்

வேண்டும் முயற்சி (பெருஞ்சித்திரனார்)

சிலந்தி வலையைப் பாருங்கள்
சின்னஞ் சிறிய பூச்சியே
வளைந்து வளைந்து புதுமையாய்
வட்ட வலையைப் பின்னுமே
தேனிக்கூட்டைப் பாருங்கள்
திறமையோடு ஒற்றுமையாய்
பெரிய முயற்சி வேண்டுமே
பேணி வீட்டைக் கட்டுமே
எறும்புப் புற்றைப் பாருங்கள்
எள்ளைப் போன்ற எறும்புகள்
அருமையான முயற்சியால்
அழகுப் புற்றைச் செய்தன
குருவிக் கூட்டைப் பாருங்கள்
குடுக்கை போன்று பின்னியே
விரைவில் கட்டி முடிக்குமே
வேண்டும் முயற்சி என்றுமே

நல்ல நாய்க்குட்டி

சின்னச் சின்ன நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
பஞ்சுப் பொதி நாய்க்குட்டி
பன்னும் தின்னும் நாய்க்குட்டி
நன்றி சொல்லும் நாய்க்குட்டி
சின்னச் சின்னக் குழந்தைகள்
கொஞ்சி மகிழும் நாய்க்குட்டி
உன்னைக் கண்டால் பிஞ்சுகள்
நெஞ்சம் மகிழ்ந்து கொஞ்சுமே
துள்ளித் துள்ளி ஓடுவாய்
அள்ளிஅள்ளித் தூக்கலாம்
வாலை வாலை ஆட்டியே
வரவேற்பு தருவாயே

பாப்பா

குட்டிக் குட்டி பாப்பா
குண்டு கன்னம் பாப்பா
தத்தித் தத்தி நடந்திடும்
கட்டித் தங்க பாப்பா
கண்கள் உருட்டி காட்டுவாள்
வாயை மூடிச் சிரிப்பாள்
சுட்டித்தனம் செய்வாள்
எங்கள் தங்கைப் பாப்பா

சேர்ந்து செய்வோம்

துண்டுத்தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன்
துண்டுத் துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர்
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள்
வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர்
சின்னப் பையன் கண்டனன்
சேர்த்துப் பூக்கள் செய்தனன்
சிறிய துரும்பும் முயற்சியால்
சிறந்த பொருளாய் மாறுமே
சின்னச்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருட்கள் செய்வோமே

பலூன்

பத்து காசு விலையிலே பலூன் ஒன்று வாங்கினேன்
பலூன் ஒன்று வாங்கினேன் பைய பைய ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே பந்துபோல ஆனது
பந்து போல ஆனதும் பலமாய் இன்னும் ஊதினேன்
பலமாய் நானும் ஊதவே பானை போல ஆனது
பானை போல ஆனதை பார்க்க ஓடி வாருங்கள்
விரைவில் வந்தால் பார்க்கலாம் இல்லை
வெடிக்கும் சத்தம் கேட்கலாம்

ஆனை ஆனை அழகர் ஆனை

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் யானை
காவேரித் தண்ணீரை கலக்கும் யானை
குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்

ஒன்றும் ஒன்றும் இரண்டு

ஒன்றும் ஒன்றும் இரண்டு
பூவில் இருப்பது வண்டு
இரண்டும் இரண்டும் நான்கு
இனிப்பாய் இருக்கும் தேங்காய்
மூன்றும் மூன்றும் ஆறு
வேலை செய்தால் சோறு
நான்கும் நான்கும் எட்டு
நன்றாய் பாடுவாள் பட்டு
ஐந்தும் ஐந்தும் பத்து
அன்பே நமது சொத்து

ஒன்று இரண்டு மூன்று

ஒன்று இரண்டு மூன்று
ஓணான் எங்கே கூறு
நான்கு ஐந்து ஆறு
மரத்தின் மேலே பாரு
ஏழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு
ஓணான் என்றே கூறு

அம்மா இங்கே வா வா - அகர வரிசை பாடல்

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சாதம் போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போல நல்லார்
ஊரில் யார்தான் உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

அம்மா அம்மா என்னம்மா

அம்மா அம்மா என்னம்மா
அழகாய் முத்தம் தந்திடுவாய்
கண்ணைப் போல என்னையே
காக்கும் கருணை தெய்வம் நீ
அம்மா நானும் வளர்ந்திடுவேன்
உலகம் எங்கும் புகழ் பெறுவேன்

பொம்மை

பொம்மை பொம்மை பொம்மை பார்
புதிய புதிய பொம்மை பார்
கையை வீசும் பொம்மை பார்
கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்
எனக்குக் கிடைத்த பொம்மை
தலையை ஆட்டும் பொம்மை பார்
தாளம் போடும் பொம்மை பார்
எனக்குக் கிடைத்த பொம்மை போல்
எதுவும் இல்லை உலகிலே
-தணிகை உலகநாதன்

சின்னச் சின்னப் பூனையாம்

சின்னச் சின்னப் பூனையாம்
சீறிப்பாயும் பூனையாம்
கன்னங்கரிய பூனையாம்
கருப்பு மீசைப் பூனையாம்
இரவில் சுற்றும் பூனையாம்
எலியைப் பிடிக்கும் பூனையாம்
புலியைப் போன்ற பூனையாம்
புத்திசாலிப் பூனையாம்

எங்கள் வீட்டு நாய்க்குட்டி

எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றி உள்ள நாய்க்குட்டி
வெள்ளை நிற நாய்க்குட்டி
துள்ளி ஓடும் நாய்க்குட்டி
குட்டிப் பாப்பா தன்னோடு
குதித்து ஆடும் நாய்க்குட்டி
கண்ணைப் போல வீட்டையே
காவல் காக்கும் நாய்க்குட்டி

மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம்
அல்வா போல மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா
இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு தின்னலாம்
அழ.வள்ளியப்பா

சின்னச் சின்ன பம்பரம்

சின்னச் சின்ன பம்பரம்
வண்ண வண்ண பம்பரம்
கன்னம் போல மின்னுதே
கடைந்த இந்த பம்பரம்
சாட்டை சுற்றி வீசினேன்
சுழன்று என்னை கவர்ந்ததே

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து பறந்து வா
சேவல் கோழி ஓடி வா
கூவி எழுப்பிட ஓடி வா
கிளியே கிளியே பறந்து வா
கிள்ளை மொழி பேசி வா
பப்பி நாய்க்குட்டியே ஓடி வா
பந்தை வாயில் கௌவி வா
வெள்ளை பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பாலும் கொண்டு வா

அசைந்தாடம்மா அசைந்தாடு

அசைந்தாடம்மா அசைந்தாடு
ஆசைக் கிளியே அசைந்தாடு
இனிய இசையே அசைந்தாடு
ஈர நெஞ்சே அசைந்தாடு
உதய நிலவே அசைந்தாடு
ஊதும் குழலே அசைந்தாடு
எழில் மயிலே அசைந்தாடு
ஏற்றத்தோடு அசைந்தாடு
ஐயம் விட்டு அசைந்தாடு
ஒழுக்கம் பேணி அசைந்தாடு
ஓவிய நூலே அசைந்தாடு
ஓளவியமின்றி அசைந்தாடு

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
தாவி வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவாயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்னிடத்தில்
பள்ளம் மேடு வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வருமே ஆட்டுக்குட்டி

நல்ல நல்ல மாம்பழம்

நல்ல நல்ல மாம்பழம்
நீண்டு பருத்த மாம்பழம்
வெல்லக் கட்டி மாம்பழம்
வாங்கித் தின்று பார்க்கலாம்
பொன் நிறத்து மாம்பழம்
பழுத்த புதிய மாம்பழம்
சின்ன மூக்கு மாம்பழம்
சிவப்பு பச்சை மாம்பழம்
சிறுவர் விரும்பும் மாம்பழம்
சுவை மிகுந்த மாம்பழம்
குலை குலையாய் மாம்பழம்
காண வாயும் ஊறுமே

சிக்கு புக்கு ரயிலு

சிக்கு புக்கு ரயிலு வருகிறதே
அக்கம் பக்கம் நிற்காதே
ரயிலு நின்ற பின் ஏறிக்கலாம்
பாப்பா நீயும் அழுவாதே
லட்டு வாங்கித் தருவேனே
காய்ச்சிய பாலும் தருவேனே

வாள் வாள் என்று குரைக்காது

வாள் வாள் என்று குரைக்காது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
பாலும் சோறும் உண்ணாது
பக்கம் அழைத்தால் வராது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
அங்கும் இங்கும் ஓடாது
அதனால் தொல்லை கிடையாது
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
எனக்குப் பிடித்த நாய்க்குட்டி
அப்படி என்ன நாய்க்குட்டி
அதிசயமான நாய்க்குட்டி
அப்பா எனக்கு வாங்கித் தந்த
ரப்பர் பொம்மை நாய்க்குட்டி

குள்ளக் குள்ள வாத்து

குள்ளக் குள்ள வாத்து
குவா குவா வாத்து
மெல்ல உடலை சாய்த்து
மேலும் கீழும் பார்த்து
செல்லமாக நடக்கும்
சின்ன மணி வாத்து

கை வீசம்மா

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய் போடலாம் கை வீசு
கோவிலுக்குப் போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு

காக்கா கண்ணுக்கு மை

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே குழந்தைக்கு பழம் கொண்டு வா

மழையே மழையே வா வா

மழையே மழையே வா வா
மரங்கள் வளர வா வா
குளங்கள் நிறைய வா வா
குடைகள் பிடிக்க வா வா
உலகம் செழிக்க வா வா
உழவர் மகிழ வா வா
ஆறுகள் பெருக வா வா
படகில் போக வா வா
ஆட்டம் போடலாம் வா வா

சாஞ்சாடம்மா சாஞ்சாடு

சாஞ்சாடம்மா சாஞ்சாடு
செல்லக்கிளியே சாஞ்சாடு
தித்திக்கும் தேனே சாஞ்சாடு
தெவிட்டாத தேனே சாஞ்சாடு
மயிலே குயிலே சாஞ்சாடு
மாடப்புறாவே சாஞ்சாடு
கட்டிக் கறும்பே சாஞ்சாடு
காய்ச்சிய பாலே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
குட்டி நிலாவே சாஞ்சாடு

கொழு கொழு கண்ணே

கொழு கொழு கண்ணே
கன்றின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கைக் கோலே
கோல் வளரும் கொடி மரமே
கொடி மரத்தில் இருக்கும் கொக்கே
கொக்கு நீராடும் குளமே
குளத்தில் வாழும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கைக் கலையமே
கலையம் செய்யும் குயவா
குயவன் எடுக்கும் மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லை தின்னும் குதிரையே
என் பேர் என்ன?
ஈ ஈ ஈ ஈ ...

வட்டமான தட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி விட்டு
எடுத்தான் மீதம் கிட்டு
மீதம் உள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு
கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு
மொத்தம் தீர்ந்தது எட்டு
மீதம் காலி தட்டு

கிழமைகள்

ஞாயிற்றுக்கிழமை - நகையைக் காணோம்
திங்கட்கிழமை - திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை - ஜெயிலுக்குப் போனான்
புதன்கிழமை - புத்தி வந்தது
வியாழக்கிழமை - விடுதலை அடைந்தான்
வெள்ளிக்கிழமை - வெளியே வந்தான்
சனிக்கிழமை - சாப்பிட்டுப் படுத்தான்
அப்புறம் அவன் கதை யாருக்குத் தெரியும்?

யானையம்மா யானை

யானையம்மா யானை
யம்மாம் பெரிய யானை
தந்தமுள்ள யானை
தடிமனான யானை
காதைப் பாரு பெரிசு
கண்கள் ரெண்டும் சிறிசு
சாதுவான யானை
சக்தி மிக்க யானை

வயல்

பச்சை நிறத்துப் பயிரைப் பார்
பசுமை கொஞ்சும் எழிலைப் பார்
கண்ணுக்கினிய காட்சி பார்
கவிதை மனதில் தோன்றும் பார்
பச்சைக் கம்பளம் விரித்தது யார்?
பசுமை பூக்க வைத்தது யார்?
பசியைத் தீர்க்கும் தொழில் இதுவே
பாரினில் சிறந்த தொழில் இதுவே

வெள்ளை நிற முயலக்கா

வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சின்னஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய்த் தோன்றும் முயலக்கா

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
யானை மேலே ஊர்வலமாம்
ஒட்டகசிவிங்கி நாட்டியமாம்
ஊர்க் குருவியின் பின் பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல
மாப்பிப்ளை பூனையைக் காணோமாம்
வந்தவரெல்லாம் தேடினாராம்
வருத்தம் கொண்டு திரும்பினாராம்
பக்கத்து வீட்டுப் பாலைத்தான்
திருடி அதுவும் குடித்ததாம்
திருட்டுப்பூனைக்கு என் பெண்ணை
திருமணம் செய்து தரமாட்டேன்
வேண்டாம் இந்த சம்பந்தம்
வெட்கக் கேடு போய் வரலாம்

குள்ள நரி

குள்ள நரியே குள்ள நரியே எங்கே போகிறாய்?
குறுக்கு வழியில் யாரை நீயும் மடக்கப் போகிறாய்?
வஞ்சகத்தால் தானே உந்தன் வயிற்றை வளர்க்கிறாய்
நல்லவனாய் நாடகமும் நடத்திக் காட்டுறாய்

கரடி மாமா வருகிறார்

கரடி மாமா வருகிறார்
கண்ணா இங்கே ஓடி வா
குட்டிக்கரணம் போடுறார்
குதித்து குதித்து நடக்கிறார்
கோலைத் தோளில் வைக்கிறார்
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறார்
கரடி வித்தை பார்க்கவே
காசு பத்து கொடுக்கலாம்

துள்ளி ஓடும் மான்குட்டி

துள்ளி ஓடும் மான்குட்டி
புள்ளி கொண்ட மான்குட்டி
கொம்பு கொண்ட மான்குட்டி
குதிக்கும் நல்ல மான்குட்டி
காட்டில் வாழும் மான்குட்டி
இலையைத் தின்னும் மான்குட்டி
ஓடியாடும் மான்குட்டி
ஒன்றாய் வாழும் மான்குட்டி

காக்கா நிறம் கறுப்பக்கா

காக்கா நிறம் கறுப்பக்கா
காக்கா கத்தும் கா கா கா
சின்ன சின்ன அலகக்கா
சேர்ந்தே தின்னும் ஒன்றாக
வட்ட வட்ட கண்ணக்கா
வானில் பறக்கும் காக்காக்கா
பட்டு போல இறக்கைக்கா
பறந்து செல்லும் காக்காக்கா

நிலா நிலா ஓடி வா

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே
பட்டம் போல பறந்து வா

தோ தோ நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வரும் நாய்க்குட்டி
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி
பாசம் காட்டும் நாய்க்குட்டி
கறிகள் தின்னும் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி
விரும்பும் நல்ல நாய்க்குட்டி

பம்பரம்

சொக்கன் விட்ட பம்பரம், சோமு விட்ட பம்பரம்
தலையை ஆட்டிச் சுற்றுது, தரையில் நின்று சுற்றுது
கொண்டையுள்ள பம்பரம், கொய்யக்கட்டை பம்பரம்
சாட்டை கொண்டு சுற்றலாம், சவுக்காட்டம் ஆடலாம்
அழகு வண்ண பம்பரம், அறுபது காசுப் பம்பரம்

தீபாவளி

வந்தது பார் தீபாவளி
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி
அதிகாலை எண்ணெய் வைத்து
நீராடி மனம் மகிழ்வோம்
புத்தம் புது ஆடை அணிவோம்
நாம் மத்தாப்பு கொளுத்திடுவோம்
எல்லோருக்கும் வாழ்த்து சொல்லி
இறைவனுக்கு நன்றி சொல்வோம்

எங்கள் வீட்டுப் பூனை

எங்கள் வீட்டுப் பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் கண்டால் ஓடும்
காலால் எலியைப் பிடிக்கும்
தயிரை ஏறிக்குடிக்கும்
நாவால் உடலைத் துடைக்கும்
நாற்காலியின் கீழே படுக்கும்

தாகம் தீர்ந்த காக்காய்

தாகத்தோடு காக்கா ஒன்று
தண்ணீருக்கு அலைந்ததாம்
வானில் பறந்து செல்கையில்
வயலில் பானை பார்த்ததாம்
கொஞ்சம் நீரே இருந்ததால்
குடிக்க முடியாமல் தவித்ததாம்
சின்ன சின்ன கற்களை
கொண்டுவந்து போட்டதாம்
கல்லு அதிகம் ஆனதும்
தண்ணீர் மேலே வந்ததாம்
தண்ணீர் குடித்த காக்கா
தாகம் தீர்ந்து பறந்ததாம்

தோசை

தோசை அம்மா தோசை அம்மா சுட்ட தோசை!
அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை!
அப்பாவுக்கு நாலு அம்மாவுக்கு மூன்று
அண்ணணுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஒன்று
திங்க திங்க ஆசை திரும்பக் கேட்டால் பூசை!

நாய்குட்டி

தோ தோ நாய்குட்டி
துள்ளி ஓடும் நாய்குட்டி!
பாலை குடிக்கும் நாய்குட்டி
பாசம் காட்டும் நாய்குட்டி!
கரிகள் தின்னும் நாய்குட்டி
காவல் காக்கும் நாய்குட்டி!
வாலை ஆட்டும் நாய்குட்டி
வாட்டம் போக்கும் நாய்குட்டி!
வீட்டை சுற்றும் நாய்குட்டி
விரும்பும் நல்ல நாய் குட்டி

எண்கள்

ஒன்று யாருக்கும் தலை ஒன்று;
இரண்டு முகத்தில் கண் இரண்டு;
மூன்று முக்காலிக்கு கால் மூன்று
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு
ஐந்து ஒரு கை விரல் ஐந்து
ஆறு ஈயின் கால் ஆறு
ஏழு வாரத்தின் நாள் ஏழு
எட்டு சிலந்திக்கு கால் எட்டு
ஒன்பது தானிய வகை ஒன்பது
பத்து இருகை விரல் பத்து
-பேராசிரியர் கா நமச்சிவாயர்

குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்
-கவிமணி தணிகை உலகநாதன்

நாலு மாடுகளும் ஒரு சிங்கமும்

அழகான கிராமத்தில் நாலு மாடு இருந்ததாம்
அங்கே இங்கே அலைஞ்சாலும் நாலும் ஒன்றாய் போனதாம்
அந்த நேரம் பார்த்துதான் சிங்கம் அங்கே வந்ததாம்
அருகில் வந்த சிங்கமும் மாட்டை தின்ன பார்த்ததாம்
நாலும் ஒன்றாய் அலைவதால் மாட்டை பிரிக்கப் பார்த்ததாம்
கொஞ்ச நேரம் பேசியே சண்டை வர வைத்ததாம்
சன்டை போட்ட மாடது பிரிந்து தனியே போனதாம்
தனித்தனியே வந்ததால் சிங்கம் மாட்டை தின்றதாம்

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

வீதி தோறும் குல்லாதான் வித்து வந்தான் வியாபாரி
அலைஞ்ச களைப்புத் தீரவே பத்து நிமிடம் தூங்கினான்
கொஞ்ச நேரம் போனது குரங்கு கூட்டம் சேர்ந்தது
ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்தாய் எடுத்தது
குல்லாய் எடுத்த குரங்கது குதிச்சு குதிச்சு ஆடுது
கண்ணயர்ந்த வியாபாரி கண்விழித்து பார்த்தானே
குல்லாய் இன்றி போகவே குரங்கை நோக்கி ஓடினான்
என்ன செய்தும் குரங்கது குல்லாய் தர மறுத்தது
சற்று நேரம் யோசித்தான் சரியான வழி கிடைத்தது
தலையில் இருந்த குல்லாயை குரங்கை நோக்கி வீசினான்
குல்லா கண்ட குரங்கது கோபத்துடன் பார்த்தது
ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்து எரிந்தது
குல்லாய் எடுத்த வியாபாரி குரங்கை விடுத்து ஓடினான்

ஆமை-முயல் போட்டி

அன்றொரு நாள் காட்டிலே ஆமைக்கும் முயலுக்கும் போட்டியாம்
உச்சி மலை எல்லையை முதலில் தொட்டால் ஜெயிக்கலாம்
ஹா ஹா-என்று முயலும்தான் ஆமையை பார்த்து சிரித்தது
சிரிப்பைக் கண்ட ஆமையும் கர்வம் வேண்டாம் என்றது
போட்டி தொடங்கிய நேரமே முயல் எடுத்தது வேகமே
பாதி தூரம் வந்ததும் திரும்பி நின்று பார்த்தது
கண்ணுக் கெட்டிய தூரமே காணவில்லை ஆமையை
ஆமை மெதுவாய் வந்ததால் முயலும் கொஞ்சம் தூங்கிச்சு
மெதுவாய் வந்த ஆமையும் முயலை முந்திச் சென்றது
தூங்கி எழுந்த முயல் அது எல்லை நோக்கி ஓடிச்சு
கர்வம் கொஞ்சம் இருந்ததால் அதுவும் தோற்றுப் போனது
எல்லையில் இருந்த ஆமையும் முயலைப் பார்த்து சொன்னது
திறமை அதிகம் இருந்தாலும் கர்வம் மட்டும் வேண்டாமே

சிங்கமும் முயலும்

காட்டில் ஒரு சிங்கம் சுத்தி சுத்தி வந்ததாம்
கண்ணில் பட்ட முயலையெல்லாம் கடிச்சு கடிச்சு தின்னுச்சாம்
கும்பல் கும்பலாய் சாவதாலே முயலும் கூட்டம் போட்டுச்சாம்
கூட்டம் போட்ட முயலும் கூடி கூடி பேசிச்சாம்
கூடிப் பேசி முயல்களும் சிங்கத்திடம் போனதாம்
சிங்க ராஜா சிங்க ராஜா சிந்திச்சுப் பாருங்க
சீக்கிரமே காலியாகிடுவோம் இப்படி தின்னாக்க
தினம் ஒருவரா நாங்க வரோம் சாப்பிட்டுக்கோங்க
நிறைய நாள் சாப்பிடலாம் சொன்னா கேளுங்க
முயலு சொன்ன ஐடியாவும் நல்லா இருந்ததாம்
தினமும் ஒரு முயலை தானே வரச் சொன்னதாம்
முதல வந்த முயலதுவும் நல்லா பேசிச்சாம்
சிங்கத்திடம் தின்ன சொன்னதாம்
என்ன அவசரம் என்று சிங்கம் கேட்டதாம்
உன்னை விட பெரிய சிங்கம் இருக்கு என்றதாம்
எங்கே இருக்கு காட்டு சிங்கம் சொன்னதாம்
கிட்ட உள்ள கிணத்துகிட்ட அழைத்துச் சென்றதாம்
எட்டிப்பாரு பெரிய சிங்கம் இருக்கு என்றதாம்
பார்த்த சிங்கம் தண்ணீரிலே பிம்பம் கண்டதாம்
தன்னைத் தானே பார்த்து அதிக கோபம் கொண்டதாம்
கோபம் கொண்ட சிங்கம் அதுவும் கிணற்றில் பாய்ந்ததாம்
சிங்கம் தொல்லை ஒழிந்ததாலே முயலும் மிகவும் மகிழ்ந்ததாம்

மழை வந்த கதை (ஸ்ரீவித்யா தர்ஷிணிக்காக எழுதியது)

வாத்து ஒன்று குளத்திலே நீந்தி நீந்தி சென்றதாம்.
மாடு ஒன்று வந்து தாகத்தில் தண்ணீரெல்லாம் குடித்ததாம்.
குளத்தின் நீரும் குறைந்து போய்விட்டதாம்.

வாத்து மாடு கிட்ட போய்
`மாடே மாடே எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மரத்து கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து மரத்துக்கிட்ட போய்
`மரமே மரமே மாடு சொல்லிச்சு
எல்லாத் தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த கடல் கிட்ட
போய் கேளு' அப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து கடல் கிட்ட போய்
`கடலே கடலே மரம் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
கடல் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த சூரியன் கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து சூரியன் கிட்ட போய்
` சூரியன் சூரியன், கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
சூரியன் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மேகத்துக்கிட்ட
போய் கேளுஅப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து மேகத்துக்கிட்ட போய்

` மேகம் மேகம் சூரியன் சொல்லித்து, கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்அப்படீன்னு கேட்டுதாம்
மேகம் அதுக்கு `அப்படியா? இதோ இப்பவே மழையை தரேன்அப்படீன்னு சொல்லித்தாம்.
மழை சோவெனப் பெய்தது. குளம் நிரம்பி, மாடு நனைந்து, மரம் எல்லாம் நனைந்து, கடலும் நிரம்பி, சூரியன் அந்த கடல் நீரை ஆவியாக்கி, மேகமாக ஆக்கியது. மீண்டும் மழை சோவெனப் பெய்தது. அந்த மகிழ்ச்சியுடன் நீந்திச் சென்றது.



.

பம்பரம்

சொக்கன் விட்ட பம்பரம்
சோமு விட்ட பம்பரம்
தலையை ஆட்டிச் சுற்றுது
தரையில் நின்று சுற்றுது
கொண்டையுள்ள பம்பரம்
கொய்யக்கட்டை பம்பரம்
சாட்டை கொண்டு சுற்றலாம்
சவுக்காட்டம் ஆடலாம்
அழகு வண்ண பம்பரம்
அறுபது காசுப் பம்பரம்

ஆனை ஆனை

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
காட்டுக் கரும்பை முறிக்கும் யானை
காவேரி நீரை கலக்கும் யானை
எட்டித் தேங்காய் பறிக்கும் யானை
குட்டி யானைக்குத் தந்தம் முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் நடந்து போச்சுதாம்

தவளையாரே

தவளையாரே தவளையாரே எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம் நடந்து போகிறேன்
நீண்ட நேரம் எதுக்காக சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று சேதி சொல்லுறேன்

வணக்கம்

அம்மா, அம்மா முதல் வணக்கம்
அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு
அப்பா, அப்பா முதல் வணக்கம்
பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு
குருவே, குருவே முதல் வணக்கம்
பதிந்தே சொல்வேன் தினம் உனக்கு
இறைவா, இறைவா முதல் வணக்கம்
எழுந்ததும் சொல்வேன் தினம் உனக்கு

அணிலே அணிலே ஓடிவா

அணிலே அணிலே ஓடிவா
அழகிய அணிலே ஓடிவா
கொய்யாமரம் ஏறிவா
குண்டுப்பழம் கொண்டுவா
பாதிப்பழம் என்னிடம்
மீதிப்பழம் உன்னிடம்
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்

அம்மா இங்கே வா வா!

அம்மா இங்கே வா வா!
ஆசை முத்தம் தா தா!
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போன்ற நல்லார்
ஊறில் யாவர் உள்ளார்
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கும் இல்லை
ஐயம் இன்றி சொல்வேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்

கரடி மாமா

கரடி மாமா கரடி மாமா எங்க போறீங்க?
காட்டுப் பக்கம் வீடிருக்கு அங்க போறேங்க
கம்பளிச் சட்டை ஜோரா இருக்கு யாரு தந்தாங்க?
கடவுள் தந்த பரிசுதாங்க வேற யாருங்க?

ஆகாய விமானம்

அழகு மூக்கு இருக்குது
அனைவரையும் சுமக்குது
பறவை போல பறக்குது
பார்க்க ஜோராய் இருக்குது
வானம் எங்கும் நீந்துது
தரையில் மெல்ல இறங்குது
என்ன அது தெரியுமா?
ஆகாய விமானம்