மிதிவண்டி

குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ் - ஏப்ரல் 2010 - 2

குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ் - ஏப்ரல் 2010 4-10

திருக்குறள் கதைகள் - கூடா நட்பு

எந்தக் கிழமையில் நீ பிறந்தாய்

ஞாயிற்றுக் கிழமை பிறந்த பிள்ளை
நன்றாய்ப் பாடம் படித்திடுமாம்.

திங்கட் கிழமை பிறந்த பிள்ளை
தினமும் உண்மை பேசிடுமாம்.

செவ்வாய்க் கிழமை பிறந்த பிள்ளை
செய்வதை ஒழுங்காய்ச் செய்திடுமாம்.

புதன் கிழமை பிறந்த பிள்ளை
பூமியில் மரங்கள் வளர்த்திடுமாம்

வியாழக் கிழமை பிறந்த பிள்ளை
வீரமாய் நாட்டைக் காத்திடுமாம்.

வெள்ளிக் கிழமை பிறந்த பிள்ளை
வேண்டும் உதவிகள் செய்திடுமாம்.

சனிக் கிழமை பிறந்த பிள்ளை
சாதனைகள் புரிந்திடுமாம்.

இந்தக் கிழமைகள் ஏழுக்குள்
எந்தக் கிழமையில் நீ பிறந்தாய்?

அலமு: ஞாயிற்றுக் கிழமை நான்பிறந்தேன்.
நன்றாய்ப் பாடம் படித்திடுவேன்.

அழகப்பன்: திங்கட் கிழமை நான்பிறந்தேன்.
தினமும் உண்மை பேசிடுவேன்.

(இப்படியே ஒவ்வொரு குழந்தையும் அவரவர் பிறந்த கிழமைக்கு ஏற்றபடி பதில் கூறலாம்.)

.

காட்டில் ஒரு திருமணம்

அம்மா

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்
கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
பாலும் சோறும் ஊட்டிடுவாய்
பாட்டும் பாடிக் காட்டிடுவாய்
தொட்டிலி(ல்) இட்டுத் தாலாட்டித்
தூங்கச் செய்வாய் எந்தனையே
கண்ணை இமை காப்பதுபோல்
காத்து என்னை வளர்த்திடும்
அன்னை உனைப்போல் இவ்வுலகில்
ஆரும் இல்லை இல்லையே!


-கவிஞர்.த.துரைசிங்கம்

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி

மரப்பாச்சிக்குக் காய்ச்சலடி
மாளவில்லை வேலை தொல்லை
பசுவும் வெளியே காத்திருக்க
பால் கறக்க நேரமில்லை
கண்கள் இரண்டும் சொக்கிப் போச்சு
கால்கள் இரண்டும் மருகிப் போச்சு
வைத்தியரும் அருகே இல்லை
வகை ஒன்றும் தெரியவில்லை
இடிச்ச இஞ்சிச் சாறெடுத்து
இம்மி மிளகு உடன் சேர்த்து
சுக்குக் கசாயம் போட்டேனடி
சுரமும் காத்தாய்ப் பறந்து போச்சு.

மிருகக் காட்சி சாலை

அம்மா அப்பா அழைத்துச் சென்றார் அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்  ஆடத் தொடங்கின
பொல்லா நரி புனுகுப் பூனை எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி கூட நின்றன
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது
முதலைத் தலையைத் தூக்கி மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று
சிங்கம் புலி எல்லாம் கண்டேன் கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன் சிறிதும் அஞ்சவில்லை
சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!

.

ஒன்று ரெண்டு மூன்று நாலு

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.
ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்குலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்ல
உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.

நிலா

வட்ட நிலா சுற்றிச்சுற்றி வானில் ஒடுது
வா வென்றே நானழைத்தால் வர மறுக்குது!
எட்டி எட்டிப் பார்த்தாலுமே எட்டப் போகுது
ஏனென்று கேட்டால் அது சிரித்து மழுப்புது"

மயிலே குயிலே

ஆடிக்களிக்கும் மயிலே வா
ஆட்டம் எனக்குச் சொல்லித்தா

ஓடித்திரியும் இளங்கன்றே வா
அம்மா என்று சொல்லித்தா!

பறந்து திரியும் காக்கா வா
பகிர்ந்துண்ண சொல்லித்தா!

பாடிக் களிக்கும் குயிலே வா
பாட்டுப் பாடச் சொல்லித்தா

தாவும் மானே அருகே வா
தாவிக் குதிக்கச் சொல்லித்தா

கூவும் கோழி இங்கே வா
கூவி எழுந்திடச் சொல்லித்தா!

தாவித் திரியும் அணிலே வா
பழம் பறிக்கச் சொல்லித்தா!

குதித்து ஓடும் முயலே வா
கூடி வாழ சொல்லித்தா!

கிள்ளை மொழி பேசும் கிளியே வா
பிள்ளைத்தமிழ் சொல்லித்தா!

வாலை ஆட்டும் நாய்க்குட்டியே வா
வீட்டை காக்க  கற்றுத்தா!

கொழுக்கட்டை

கொழுக்கட்டையே கொழுக்கட்டையே ஏ(ன்) வேகல?
மழயும் பேஞ்சிச்சு நா வேகல
மழயே மழயே ஏம் பேஞ்சிங்க?
புல்லு மொளைக்க நாம் பேஞ்சேன்
புல்லே புல்லே ஏம் மொளச்சிங்க?
மாடு திங்க நா மொளச்சேன்
மாடே மாடே ஏந் தின்னீங்க?
பாலு கறக்க நாந் தின்னேன்.
பாலே பாலே ஏங் கறந்தீங்க?
பால்காரர் கறந்தார் நா கறந்தேன்.
பால்கார்ரே பால்காரரே ஏங் கறந்தீங்க?
அம்மா சொன்னாங்க நாங் கறந்தேன்.
அம்மா அம்மா ஏஞ் சொன்னீங்க?
பாப்பா அழுதுச்சு நாஞ் சொன்னேன்.
பாப்பா பாப்பா ஏ அழுதீங்க?
எறும்பு கடிச்சுச்சு நா அழுதேன்.
எறும்பே எறும்பே ஏங் கடிச்சீங்க?
எங்க புத்துக்குள்ள கைய வுட்டா சும்மாருப்பமோ?

பசுவே பசுவே

பசுவே பசுவே பால் தருவாய்
பச்சைப் புல்லை நான் தருவேன்

பாலைத் தந்தால் காய்ச்சிடுவேன்
பதமாய்க் கோவா செய்திடுவேன்

மாலை நேரம் நண்பருடன்
மகிழ்ந்தே அதனை உண்டிடுவேன்!

குட்டிக் குட்டிக் கண்ணா

குட்டி குட்டி கண்ணனாம்
குறும்பு செய்யும் கண்ணனாம்
கண்ணடிக்கும் கண்ணனாம்
கண் கவரும் கண்ணனாம்

முத்துப் பல் கண்ணனாம்
முத்தம் தரும் கண்ணனாம்
குழலூதும் கண்ணனாம்
குஷியாக்கும் கண்ணனாம்

மயிலிறகுக் கண்ணனாம்
மனம் மயக்கும் கண்ணனாம்
கொஞ்சிப் பேசும் கண்ணனாம்
கொட்டம் செய்யும் கண்ணனாம்

வெண்ணை தின்னும் கண்ணனாம்
வெள்ளை உள்ளக் கண்ணனாம்
வீரமுள்ள கண்ணனாம்
வெற்றி பெரும் கண்ணனாம்

ஞானமுள்ள கண்ணனாம்
நன்மை செய்யும் கண்ணனாம்
மாடு மேய்த்த கண்ணனாம்
மாசு போக்கும் கண்ணனாம்

பாட்டுப் பாடும் கண்ணனாம்
பாவம் போக்கும் கண்ணனாம்
ஆட்டம் போடும் கண்ணனாம்
ஆனந்தக் கண்ணனாம்

மனம் மகிழ போற்றுவோம்
மாலைகள் பல சாற்றுவோம்
அவன் புகழை பாடுவோம்
ஆனந்தக் கூத்தாடுவோம்

இந்தப் பாடலை எழுதியவர்:
நன்றி சகோதரா!

பூனைக்குட்டி

பூனைக்குட்டி பூனைக்குட்டி கூட வராதே
பொழுதோடு திரும்பி வருவேன் கூட வராதே

பாலைக் குடித்து ஆட்டம் போடு கூட வராதே
பஞ்சு மெத்தையில் படுத்துப் புரளு கூட வராதே

கோபப் பார்வை பார்க்க வேண்டாம் கூட வராதே
குட்டிப் பாப்பா முத்தம் கொடுப்பேன் கூட வராதே

பள்ளிக்கூடம் போகின்றேன் கூட வராதே
பார்ப்பவரெல்லாம் கிண்டல் செய்வார் கூட வராதே!
-பாவண்ணன்


.

தஞ்சாவூரு பொம்மை

தஞ்சாவூரு பொம்மைதான்!
தலை ஆட்டும் பொம்மைதான்!
எந்தப் பக்கம் சாச்சாலும்

எழுந்து நிற்கும் பொம்மைதான்!
வண்ண வண்ண பொம்மைதான்!
வடிவம் உள்ள பொம்மைதான்!

கண்ணைக் கவரும் பொம்மைதான்!
கருத்தில் நிலைக்கும் பொம்மைதான்!
எந்தத் திசையில் விழுந்தாலும்

எழுந்தே நிற்போம் பொம்மைபோல்!
நம்பி வாழ்வோம் உலகத்தில்
நாளை வெற்றி நமதாகும்!



.

நல்ல குரங்கினம்

மனிதன் போல இருக்குது
மரத்தின் மேலே ஏறுது
கனியும் காயும் தின்னுது
காடு மலையில் வாழுது
இனிக்கும் கரும்பை ஒடிக்குது
இன்ப மாகத் தின்னுது
மனித னுக்கு வாலில்லை
மந்தி குரங்கைப் போலவே
கூட்டம் கூட்ட மாகவே
கூடி வாழும் குரங்கினம்
ஆட்டம் பாட்டம் போடுமே
ஆலம் விழுதில் தொங்குமே
ஓட்ட மாக ஓடியே
ஒன்றை யொன்று பிடிக்குமே
நாட்டித் தடியை ஓங்கவே
கடிக்கப் பாயும் நம்மையே

யானையும் குட்டி குழந்தைகளும்

டிங் டாங் மணியோசை
தெரு முனையில் கேட்குது
அங்கே ஒரு யானை
அசைந்து அசைந்து வருகுது

அசைந்து வரும் யானையைப் பார்க்க
அன்பு பாப்பாக்கள் குவியுது

ஆளுக்கு ஒரு காசு
அதன் கையில கொடுக்குது

கேள்விக் குறிபோல்
கையைத் தூக்கி

காசு தந்த பாப்பாவுக்கு
சலாம் ஒன்று போடுது

அகன்று செல்லும் வேளையில்
நாசுக்காய் கொஞ்சம் பிளிறுது
பிளிறும் சத்தம் கேட்டு
பிஞ்சுகள் சிலது அலறுது
அலறிய பிள்ளையைப் பார்த்து
அடுத்தது கைகொட்டி சிரிக்குது
டிங்டாங் மணியோசை இப்போ
தெருக்கோடியில் முடிஞ்சது

பள்ளிக் கூடம் போகலாமே

பள்ளிக் கூடம் போகலாமே
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாமே
சின்ன பாப்பா!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
சின்ன பாப்பா -கல்வித்
தோட்டம் அந்த பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!


பள்ளிக் கூடம் திறந்தாச்சி
சின்ன பாப்பா -உனக்கு
நல்ல நேரம் பிறந்தாச்சி
சின்ன பாப்பா!

வீட்டுச் செய்தி கதைகள் பேசி
பொழுது போக்கலாம் -அட
ஏட்டுக் கல்வி பாடம் கூட
எழுதிப் பார்க்கலாம்!


உடலும் மனமும் வளர்வதர்ற்கு
சின்ன பாப்பா -ஏற்ற
இடமே இந்தப் பள்ளிக் கூடம்
சின்ன பாப்பா!

பள்ளிக் கூடம் போகலாம் வா
சின்ன பாப்பா -நிறைய
பிள்ளைக ளோட பழகலாம் வா
சின்ன பாப்பா!