குட்டி எலியும் சிங்கமும்

குட்டி எலி அன்றொரு நாள்
குதிச்சு குதிச்சு ஓடிச்சாம்!
யானை, புலி, சிங்கம் காண
ஆசை கொண்டு ஓடிச்சாம்!
உயரமான மரத்தில் ஏறி
உலகமெல்லாம் பார்த்ததாம்!
தூரத்திலே சிங்கம் ஒன்று
தூங்குவதைப் பார்த்ததாம்!
மளமள என்று இறங்கி
அது மகிழ்ச்சியுடன் ஓடிச்சாம்!
மேலும் கீழும் பார்த்து
அதன் மீசையை பிடித்து இழுத்ததாம்!
வளைய வளைய வந்து
அதன் வாலைப் பிடித்து இழுத்ததாம்!
கோபம் கொண்டு எழுந்த சிங்கம்
குட்டி எலியைப் பிடித்ததாம்!
கையில் பிடித்த எலியை அது
கடித்து தின்ன பார்த்ததாம்!
கை கூப்பி குட்டி எலியும்
கருணை கருணை என்றதாம்!
மண்டியிட்டு குட்டி எலியும்
மன்னிப்பு என்றதாம்!
பெரிய மனசு பண்ணி சிங்கம்
பிழைத்துப்போ என்றதாம்!
விடுவிடு என்று நடந்த சிங்கம்
வேடன் வலையில் விழுந்ததாம்!
அது கர்ஜித்து அழுத ஓசை
காடு முழுதும் கேட்டதாம்!
எங்கோ கேட்ட குரல் என்று
குட்டி எலியும் வந்ததாம்!
சிங்கம் சிக்கியிருந்த வலையை அது
சின்னாபின்னமாய் கடித்ததாம்!
வெளியில் வந்த சிங்கம் எலியிடம்
நன்றி நன்றி என்றதாம்!
செய்த நன்றி மறவேன் என்று
சின்ன எலியும் சொன்னதாம்!

0 comments: